உலகம்

நேபாளத்தில் கரோனா பாதிப்பு 16,500 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

நேபாளத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,500 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நேபாள சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேபாளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,500 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 7,891 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் உள்ள 77 மாவட்டங்களில் இரு மாவட்டங்களைத் தவிர்த்து 75 மாவட்டங்களில் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது.

கரோனாவை எதிர்கொள்வதற்காக நேபாள அரசு சுகாதார நடவடிக்கைகளுக்கு அதிகம் செலவிட்டு வருகிறது. மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உணவின்றித் தவித்து வருபவர்களுக்கு உணவு வழங்குதல் போன்ற செயல்பாடுகளுக்கும் அந்நாட்டு அரசு செலவிட்டு வருகிறது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள போதிய நிதியின்றித் திணறி வரும் நேபாள நாட்டுக்கு சர்வதே நாணய நிதியம் (ஐஎம்எஃப்) 214 மில்லியன் டாலர் நிதி வழங்க ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா பரவலைத் தடுக்க நேபாளத்தில் ஜூலை 22 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT