உலகம்

பாகிஸ்தானில் செப்டம்பர் முதல் கல்வி நிறுவனங்களைத் திறக்க அரசு திட்டம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் வரும் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளைத் திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாகக் குறைந்துள்ளதால் செப்டம்பரில் பள்ளிகளைத் திறக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தான் கல்வித்துறை அமைச்சர் ஷாஃபத் மஜ்மூத் கூறும்போது, “கல்வி நிறுவனங்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,359 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 61 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் இதுவரை 2,40,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,983 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக் காட்டி ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.

இந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா பரவல் அதிகமுள்ள மாகாணக்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, வணிக நிறுவனங்கள் வாரத்திற்கு 5 நாட்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மதக் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை.

SCROLL FOR NEXT