சிரியாவில் ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண முடியாது என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
போர் நடைபெறும் சிரியாவின் தற்போதைய சூழல் குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி ரஷ்யா மற்றும் துருக்கி பிரதிநிதிகளுடன் காணொலிக் காட்சி மூலம் இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “சிரியாவில் ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. அரசியல் ரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும். நாங்கள் சிரியாவில் அமைதி ஏற்படுவதற்கான உரையாடலை ஆதரிப்போம். ஐஎஸ், அல்கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக எங்கள் நடவடிக்கை தொடரும்” என்றார்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.
ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.