உலகம்

அமெரிக்காவில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் கரோனா

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்களிடையே கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தகைய இடங்களுக்குச் செல்லும் இளைஞர்களிடையே கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.

குறிப்பாக, ப்ளோரிடோ, டெக்ஸாஸ், அரிசோனா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

ப்ளோரிடோ மாகாணத்தில் கடந்த வாரம் 8,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு சமீப நாட்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 31 சதவீதம் பேர் 15 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள்” என்று செய்தி வெளியானது.

உலக அளவில் கரோனா தொற்று எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதுவரையில் 24 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.24 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிவதில்லை. இதன் காரணமாகவே இளைஞர்களிடையே தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT