உலகம்

ஜெர்மனியில் சில இடங்களில் புதிதாக மீண்டும் ஊரடங்கு

செய்திப்பிரிவு

ஜெர்மனியில் இறைச்சி ஆலை ஒன்றில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் உறுதிச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ இறைச்சி ஆலை ஒன்றில் கரோனா தொற்று மீண்டும் பரவியதைத் தொடர்ந்து ஜெமனியின் ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் உள்ள குட்டர்ஸ்லோ மாவட்டத்தில் ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு ஜூன் மாதம் 30 ஆம் தேதிவரை நீடிக்கும். குட்டர்ஸ்லோ மாவட்டத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் உள்ளன.
கரோனா பரவலை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி கடந்த மாதம் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜெர்மனியில்50 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1,92,119 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,969 பேர் பலியாகியுள்ளனர். 1, 75,300 பேர் குணமடைந்துள்ளனர்.

ஜெர்மனியில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கடைகள், பள்ளிகள், விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றை படிப்படியாக திறக்க அனுமதி அளித்தது. மேலும் மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவலால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி தற்போது இறங்கியது.

இந்த நிலையில் மீண்டும் ஜெர்மனியில் சில இடங்களில் மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT