உலகம்

கரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 90% பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்: நேபாளம்

செய்திப்பிரிவு

நேபாளத்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 90% பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேபாள சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், “நேபாளத்தில் கரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 90% வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள். பெரும்பாலும் அவர்கள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்களுக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் இல்லை. நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 421 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தொற்று எண்ணிக்கை 9,026 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேபாளத்தில் உள்ள 77 மாவட்டங்களில் 75 மாவட்டங்களில் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது.

கரோனாவை எதிர்கொள்வதற்காக நேபாள அரசு சுகாதார நடவடிக்கைகளுக்கு அதிகம் செலவிட்டு வருகிறது. மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உணவின்றித் திணறி வருபவர்களுக்கு உணவு வழங்குதல் போன்ற செயல்பாடுகளுக்கும் அந்நாட்டு அரசு செலவிட்டு வருகிறது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள போதிய நிதியின்றித் திணறி வரும் நேபாள நாட்டுக்கு சர்வதே நாணய நிதியம் (ஐஎம்எஃப்) 214 மில்லியன் டாலர் நிதி வழங்க கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.

நேபாளத்தின் வருவாயில் சுற்றுலாத் துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது கரோனா வைரஸால் சுற்றுலாத் துறை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT