அமெரிக்காவில் விசாரணைக்கு வர மறுத்த கறுப்பின இளைஞர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இதனால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்தமாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது. பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போலீஸ் அதிகாரி டெர்ரக் சவுவின் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவுசெய்தனர். அவருடன் இருந்த 3 போலீஸார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதி ஊர்வலம் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.இந்தநிலையில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள உணவகம் முன்பு ரேஷர்ட் புரூக்ஸ்(27) என்ற கறுப்பின இளைஞர், நேற்று முன்தினம் இரவு காரில் தூங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து உணவக ஊழியர்கள் போலீாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அங்கு வந்து அவரை அங்கிருந்து வெளியேற்ற முற்பட்டனர்.
அப்போது, போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து கொண்டு அவர் ஓட முயன்றார். அவரை போலீசார் பின் தொடர்ந்த போது, புரூக்ஸ் சுட முயன்றார். இதனையடுத்து, போலீசார் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் புரூக்ஸ் பலத்த காயமடைந்தார். இதில் படுகாயமடைந்த புரூக்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதனை கண்டித்து, அட்லாண்டா நகரில் போராட்டம் ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் சாலைகளை மறித்து போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையே இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பேற்று அடலாண்டா காவல்துறை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.