பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,239 பேர் கரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 40,919 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைகழகம் கூறும்போது, “ பிரேசில் கடந்த 24 மணி நேரத்தில் 1,239 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 40, 919 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30,412 பேருக்கு நேற்று மட்டும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது பிரேசிலில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,08,828 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது.
கரோனா தொற்று காரணமாக பிரேசிலில் பெரும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளன.
பிரேசிலில் முக்கிய வணிகப் பகுதியான ரியோ டி ஜெனிராவில் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் நிரந்தரமாக மூடும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக மோசமான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் நலவாரிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பிரேசிலில் கரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை மறைக்கும் விதமாக முன்னுக்குப் பின் முரணாக அரசு இணையதளத்தில் பிரேசில் அரசு பதிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது.
முன்னதாக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சிகளில் தோல்வி அடைந்துவிட்டார் என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் பிரேசில் பொருளாதார இழப்பையும், வேலை இழப்பையும் சந்தித்துள்ளது.