ஜெர்மனியின் பான் நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் (49) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜெர்மனி பிளவுபட்டது. பான் மேற்கு ஜெர்மனியின் தலைநகராகவும் பெர்லின் கிழக்கு ஜெர்மனியின் தலைநகரமாகவும் விளங்கின. 45 ஆண்டுகளுக்குப் பிறகு 1990-ல் கிழக்கு, மேற்கு ஜெர்மனி நாடுகள் ஒன்றாக இணைந்தன. தற்போது ஒன்றுபட்ட ஜெர்மனியின் தலைநகராக பெர்லின் உள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியின் பான் நகர மேயர் தேர்தல் நேற்றுமுன்தினம் நடை பெற்றது. இதில் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் டெமாகரடிக் யூனியன் -சி.டி.யு. கட்சி யைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் அமோக வெற்றி பெற்றார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர், தற்போது கோனிங்ஸ்வின்டர் நகர துணை மேயராகவும், கருவூலத் துறை தலைவராகவும் உள்ளார். இந்திய தந்தைக்கும் ஜெர்மனி தாய்க்கும் பிறந்த அசோக் ஸ்ரீதரன் ஜெர்மனியின் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.