உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு சுமார் 70, 06,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவ பல்கலைகழமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ உலக முழுவதும் அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70, 06, 436 ஆக அதிகரித்துள்ளது. 4,06,195 பேர் பலியாகி உள்ளனர். 34, 61,628 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் சுமார் 19,40,468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,10,503 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கபட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி கரோனா தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக சில நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.