உலகம்

ஜூன் 15 முதல் பயணத் தடையை விலக்கும் ஜெர்மனி 

செய்திப்பிரிவு

ஜூன் மாதம் 15 ம் தேதிமுதல் பயணத் தடையை விலக்க இருப்பதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவுத் துறை ஹெக்கோ மாஸ் அமைச்சர் தரப்பில், “கரோனா வைரஸ்ஸை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மனியில் விதிக்கப்பட்ட பயணத் தடை வரும் ஜூன் 15-ம் தேதி முதல் விலக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை ஜூன் 15 -ம் தேதி முதல் விலக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1,84,091 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,674 பேர் பலியாகியுள்ளனர். 1,67,300 பேர் குணமடைந்துள்ளனர்.

ஜெர்மனியில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் கடைகள், பள்ளிகள், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றைத் திறக்கத் திட்டமிட்டு வருகிறோம், தற்போது ஜெர்மன் கரோனா பரவலின் முதல் கட்டத்தைக் கடந்துவிட்டாலும், தொடர்ந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

கரோனா வைரஸ் பரவலால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி தற்போது இறங்கியுள்ளது.

SCROLL FOR NEXT