உலகம்

உலகம் முழுவதும் கரோனாவுக்கு 3,49,000 பேர் பலி: தென் அமெரிக்காவில் அதிகரிக்கும் தொற்று

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 3,49,000 பேர் பலியாகி உள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “கடந்த 24 மணி நேரத்தில் 5,581 பேர் கரோனா வைரஸால் பலியாகினர். இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 3,49,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா தொற்றினால் இதுவரை 54,88,825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் வடக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கரோனா தொற்று மற்றும் மரணங்களில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் சுமார் 17,45,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,02,114 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

SCROLL FOR NEXT