ரஷ்ய அதிபர் புதின் 
உலகம்

ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வரும் நிலையில், ரஷ்யாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,764 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,705 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 2,962 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த பத்து நாட்களாக ஒவ்வொரு நாளும் 10,000 பேர் வரை ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 8,764 ஆகக் குறைந்திருக்கிறது.

இந்த நிலையில் கரோனாவால் பாதிப்புக்குள்ளான முதல் பத்து நாடுகளில் ரஷ்யா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கரோனா வைரஸால் 15,70,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ உட்பட பல முக்கிய அமைச்சர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் 49,89,061 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,24,961 பேர் பலியாகியுள்ளனர். 19, 59,191 பேர் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT