கரோனா வைரஸ் ஒருவேளை அழிக்கப்பட்டாலும் நமது சமூகத்தில் மாற்றம் உண்டாகும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, “நாம் சில ஆண்டுகளாக உலகம் உருமாறி வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் கரோனா வைரஸ் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிக்கப்பட்டு அது முடிவுக்கு வந்தாலும் மக்கள் அவர்களின் பழக்க வழக்கங்களில் மாறக்கூடும். நீங்கள் ஒரு செயலைச் செய்வதற்கு முன் அதற்கான திட்டங்களை முன்னரே உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்றார்.
மேலும், கரோனா தொற்றால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கனடா மீன்வளத் துறைக்கு அளிக்கும் நிதிகளைப் பற்றிய தகவலையும் ஜஸ்டின் குறிப்பிட்டார்.
கனாடாவில் கரோனா வைரஸால் 73,401 பேர் பாதிக்கப்பட 5,472 பேர் பலியாகியுள்ளனர். 36,091 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா காரணமாக அமெரிக்கா - கனடா இடையே எல்லை மூடல் தொடர்கிறது. எல்லை மூடல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் சார்ந்த நடவடிக்கைகள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகளும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன.
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ், 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.