உலகம்

கரோனா; இந்தியர்களை அழைத்து வர மாலத்தீவு சென்றது கடற்படை கப்பல்

செய்திப்பிரிவு

மாலத்தீவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஐஎன்எஸ் ஜல்ஸ்வா கப்பல் மாலே துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், வேலை மற்றும் கல்வி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கடற்படை கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் கட்டண அடிப்படையில் அழைத்து வரப்படுவார்கள். குறிப்பாக, கரோனா வைரஸ்பாதிப்பு அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அழைத்து வரப்படுவார்கள் என்றும் முதல் கட்டமாக 19 லட்சம் பேர் அழைத்து வரப்படவுள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் மாலத்தீவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஐஎன்எஸ் ஜல்ஸ்வா கப்பல் மாலே துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு சென்றுள்ள கப்பலில் 750 இந்தியர்கள் கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்துவரப்படவுள்ளனர். மாலத்தீவில் இருந்து இந்தியர்களை அழைத்துக் கொண்டு அந்த கப்பல் நாளை புறப்படுகிறது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை கடற்படை கப்பல் மூலம் மீட்கும் நடவடிக்கைக்கு சமுத்திர சேது எனப்பபெயரிப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT