உலகம்

ஜப்பானில் மே இறுதிவரை ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு: பிரதமர் சூசக தகவல்

செய்திப்பிரிவு

ஜப்பானில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மே இறுதிவரை ஊரடங்கை நீட்டிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறும்போது, “ கரோனா பிடியிலிருந்து விலகி ஜப்பான் மே 7 ஆம் தேதி இயல்பு நிலைக்கு வருவது கடினமானது. வைரஸுக்கு எதிராகப் போராடத் தயாராக வேண்டும். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன். மாகாண அரசுகளும் இதற்கு தயாராக வேண்டும். ஊரடங்கை நீடிப்பது குறித்து 6-ம் தேதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 16-ம் தேதி முதல் ஜப்பானில் 47 மாகாணங்களில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது பிரதமர் ஷின்சோ அபேவும் மே 7-ல் ஜப்பான் இயல்பு நிலைக்குத் திரும்புவது கடினம் என்று கூறியுள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பையே அவர் சூசகமாகக் கூறுவதாக ஊடகங்கள் கணிக்கின்றன.

ஜப்பானில் கரோனா வைரஸுக்கு 14,088 பாதிக்கப்பட்டுள்ளனர். 430 பேர் பலியாகினர். 2,460 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் முழுமையாக நடத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பாக உணர வேண்டியது அவசியம் என்றும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தாத வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இயலாது என ஜப்பான் முன்னரே தெரிவித்துவிட்டது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT