ஈரானின் ராணுவக் கப்பல்களுக்கு அச்சுறுத்தும் விதமாக அமெரிக்கா நடந்துகொண்டால், வளைகுடாவில் இருக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரானின் புரட்சிகர காவலாளிப் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹூசைன் சலாமி எச்சரித்துள்ளார்.
ஈரானிய கப்பல்கள் அமெரிக்க கப்பல்கள்களுக்கு அச்சுறுத்தும்விதமாக நடந்துகொண்டால் அவற்றை அழித்துவிடுங்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் அதன் கடற்படைக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில், அப்படி ஏதேனும் நடந்தால் வளைகுடாப் பகுதியில் இருக்கும் அமெரிக்க கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது ”எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதேனும் ஊறுவிளைவித்தால், மிக மோசமாக எதிர்வினையாற்றுவோம். அவர்களுக்கு எங்களின் வலிமைப் பற்றி தெரியும். முந்தைய சமயங்களில் நாங்கள் கொடுத்த பதிலடியிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள்’’என்றார்.
அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே 2018 முதல் மீண்டும் போர்ச் சூழல் மூண்டுவந்த நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகனைத் தாக்குதல் நடத்தி கொன்றது. அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 78 ஆண்டுகளில் நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்நிலையில் மீண்டும் இவ்விரு நாடுகள் உரசிக்கொள்கின்றன.
தற்போது உலக நாடுகள் கரோனா வைரஸால் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிற நிலையில் இவ்விருநாடுகளும் மீண்டும் போர்ச் சூழலை நோக்கி நகர்வது ஆபத்தான போக்காகப் பார்க்கப்படுகிறது.