போலியோவை எதிர்த்து வெற்றி கண்ட இந்தியா, தற்போது உலுக்கி வரும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டெழும் என உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கைபிரியசஸ் கூறியதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராடுவதில் இந்தியாவின் ஒத்துழைப்பு சிறப்பானது. உலக சுகாதார அமைப்புடன் இணைந்து போலியோவை எதிர்த்து வெற்றி கண்ட நாடு இந்தியா.
தற்போது உலுக்கி வரும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டெழும். இதுபோன்ற இணைந்து பணியாற்றுவதன் மூலமே கரோனாவை வெல்ல முடியும். கரோனாவை ஒழிக்க இந்திய சுகாதார அமைச்சகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்’’ எனக் கூறினார்.