சீனாவில் கரோனா வைரஸுக்குப் பலியான பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 3 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 190 நாடுகளில் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 11,17,860 பேர் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 59,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸுக்கு அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.
இந்நிலையில் சீனாவில் இன்று நாடு முழுவதும் கரோனா வைரஸால் பலியான பொதுமக்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு 3 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் போக்குவரத்தும் மூன்று நிமிடம் நிறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். சீன தேசியக் கொடியின் முன் மலர் ஏந்தி சீன மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சீன மருத்துவர் ஒருவர் கூறும்போது, “என்னுடன் பணிபுரிந்தவர் மற்றும் பொதுமக்களின் இறப்புக்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சுமார் 80,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.