கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,612 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், “உலகம் முழுவதும் கோவிட் காய்ச்சல் பாதிப்புக்கு 4,17,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 18,612 பேர் பலியாகினர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த ஜனவரி மாதத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கோவிட்- 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.