கரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தோன்றி இன்று உலகம் முழுதும் பரவி அனைத்து நாடுகளும் லாக்-டவுன் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் சீனாவின் கரோனா மையமான ஹூபேய் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன.
ஆரோக்கியமானவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் சீனாவில் புதிதாக கரோனா தொற்று எதுவும் இல்லை. மாறாக புதிதாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான கரோனா நோயாளிகல் 47 பேருடன் சேர்த்து இதுவரை 474 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 474 பேரும் அயல்நாட்டிலிருந்து சீனா திரும்பிய சீன நாட்டவர்கள் என்று அந்நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
5 கோடி மக்களுக்கும் மேல் வசிக்கும் ஹூபேயின் கட்டுப்பாடுகள் அகற்றப்படுவதாக சீனா அறிவித்துள்ளது. சில விமானநிலையங்கள், ரயில் நிலையங்கள் திறந்துள்ளன.
வூஹான் மாகாணத்தின் குடியிருப்புவாசிகள் ஏப்ரல் 8ம் தேதி முதல் வீட்டைவிட்டு வெளியே வரலாம் என்று கூறப்பட்டுள்ளது, ஹூபேயில் பள்ளிகள் திறக்க அனுமதியில்லை. மூடித்தான் இருக்க வேண்டும்.
சீனாவில் கோவிட்-19 பலி எண்ணிக்கை 3,281, இன்னும் 81,200 பேர் கோவிட்-19 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வரும் சீனர்கள் கரோனாவுடன் வருவதால் சீனாவில் இரண்டாம் அலை கரோனா தொற்று ஏற்படலாம் என்று பீதி கிளம்பினாலும் சீன அரசு இது தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.