உலகம்

ஈரானில் கரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியானதைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், ''ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 147 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 19,644 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

கோவிட் - 19 காய்ச்சலால் ஈரான் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கோவிட்-19 காய்ச்சல் காரணமாக வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT