உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸிக்கு துருக்கியில் முதல் மரணம் ஏற்பட்டு இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துருக்கியின் சுகாதாரத் துறை அமைச்சர் ஃபஹ்ரெடின் கோகா கூறும்போது, “துருக்கியில் கோவிட் 19 காய்ச்சல் பாதிப்பில் ஒருவர் மரணமடைந்தார். மேலும் துருக்கியில் கோவிட் 19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
துருக்கியில் கோவிட் 19 காய்ச்சல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர் என்று எர்டோகன் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.