உலகம்

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 14,000 பேர் பாதிப்பு: உலக சுகாதார மையம்

செய்திப்பிரிவு

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு உலக முழுவதும் 14,000 புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில், “உலக முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 14,000 பேருக்கு கோவிட் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் உலக முழுவதும் சுமார் 1,67,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் 19 காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6,606 ஆக அதிகரித்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT