துருக்கி ராணுவ வீரர்கள் சிரியப் படையால் கொல்லப்பட்டத்தை தொடர்ந்து சிரியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் விரைவில் பதற்றம் குறையும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறும்போது, “துருக்கி - ரஷ்யா சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் சிரியாவில் பதட்டங்களை குறைப்பதற்கான நம்பிக்கையை இரு நாடுகளும் வெளிப்படுத்தி கொண்டன. இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக போராட்டம் தொடரும்.
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
முன்னதாக இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலியாகினர்.
இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.
உலக நாடுகளின் போர்க்களமாக இருக்கும் சிரியாவில் இதுவரை 3 லட்சத்து 46,600 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 70 சதவீத மக்கள் வறுமையிலும் உணவுத் தட்டுப்பாட்டாலும் தவிக்கின்றனர். அதேபோல், சுமார் 10 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து விட்டனர் என்று ஐ.நா. தெரிவிக்கின்றது.