துருக்கியில் அமெரிக்க தூதரகம் உட்பட 3 இடங்களில் தீவிர வாதிகள் நேற்று தொடர் தாக்குதல்களை நடத்தினர்.
துருக்கியில் குர்து இன மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்கள் தனி நாடு கோரி வருகின்றனர். இதை வலியு றுத்தி பல்வேறு குர்து தீவிரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
அண்மையில் இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய துருக்கி போர் விமானங்கள் அங்குள்ள குர்து இன மக்கள் மீதும் குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.
தூதரகம் மீது தாக்குதல்
இதற்கு பழிவாங்கும் வகையில் துருக்கியில் செயல்படும் குர்து தீவிரவாத அமைப்பு இஸ்தான்புல், சிர்நாக் பகுதிகளில் நேற்று தொடர் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்தான்புல் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து இரண்டு தீவிரவாதிகள் நேற்று அதிகாலை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கையெறி குண்டுகளை வீசினர். போலீஸார் பதில் தாக்குதல் நடத்தியபோது இருவரும் தப்பியோடினர். இதில் ஒரு தீவிரவாதி மட்டும் பிடிபட்டார். அவர் பெண் என்று துருக்கி போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது.
கார் குண்டுவெடிப்பு
இஸ்தான்புல் புறநகர் பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு நேற்று அதிகாலை சக்திவாய்ந்த கார் குண்டு வெடித்தது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். 3 போலீஸார் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
போலீஸார் தேடுதல் வேட்டையின்போது அங்கு பதுங்கியிருந்த இரண்டு தீவிர வாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
ஹெலிகாப்டர் மீது தாக்குதல்
துருக்கியின் தென்கிழக்குப் பகுதியான சிராக் நகரில் ராணுவ ஹெலிகாப்டரை குறிவைத்து குர்து தீவிரவாதிகள் அதிநவீன ராக்கெட்டால் தாக்கினர். இதில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் படுகாயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் குண்டுகளை வீசின. இதில் தீவிரவாதிகள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு, சேதம் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. மேலும் சிராக் பகுதியில் நிகழ்த்தப்பட்ட சாலையோர குண்டுவெடிப்பில் 4 போலீஸார் கொல்லப்பட்டனர்.
துருக்கி அரசுக்கும் குர்து தீவிரவாதிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தது. குர்து மக்கள் மீது துருக்கி விமானப் படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அங்கு உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது.