உலகம்

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு வாத்துகளை அனுப்பும் சீனா?

செய்திப்பிரிவு

பாலைவன வெட்டுக்கிளிகளின் வருகையால் பாகிஸ்தானில் விவசாயப் பயிர் விளைச்சல்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் சீனா வாத்துகளை அனுப்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எத்தியோப்பியாவில் பாதிப்பை ஏற்படுத்திய பாலைவன வெட்டுக்கிளிகள் அங்கிருந்து சூடான், சவுதி அரேபியா, ஈரான் வழியாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் வரை சென்றது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை பஞ்சாப் மாகாணம்தான் நாட்டின் முக்கிய விவசாய உற்பத்தி பிராந்தியம். தற்போது வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தியுள்ள பிரதேசமும் அதுதான்.

பஞ்சாப் மாகாணத்தின் மொத்த விளைச்சலும் நாசமாகிவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது. மேலும், பாகிஸ்தானின் பெரும்பங்கு விவசாயமும் வீணாகியுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே பாகிஸ்தானில் நெருக்கடி நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைச் சமாளிக்க ரூ.730 கோடி தேவைப்படும் ஒரு தேசிய செயல் திட்டத்திற்கும் (என்ஏபி) பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்நிலையில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றை உணவாக உண்ணும் வாத்துகளை சீனா அனுப்ப உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோழிகளை விட வாத்துகள் வெட்டுக்கிளிகளை அதிகம் உண்ணும் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு நிபுணர்களை அனுப்ப உள்ளதாக சீனா இந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதிகாரபூர்வத் தகவல் இதுவரை வெளியாகவில்லை.

          
SCROLL FOR NEXT