சிரியாவில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இட்லிப்பின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து துருக்கி போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “சிரியாவில் உள்ள துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இட்லிப்பில் உள்ள முக்கியப் பகுதியான நைரப் பகுதியைக் கைப்பற்றியுள்ளனர். இது சிரியாவின் முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதி” என்று தெரிவிக்கபட்டுள்ளது.
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90,000 பேர் சிரியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.