உலகம்

கிளர்ச்சியாளர்களின் மூன்று முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றிய சிரிய அரசுப் படைகள்

செய்திப்பிரிவு

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மூன்று பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன.

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மூன்று முக்கியப் பகுதிகளான அல் நக்யார், அர நபியா, அல் டையிர் ஆகிய பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன.

சிரிய அரசுப் படைகளால் தங்கள் வசம் உள்ள பகுதிகள் கைப்பற்றப்படுவதைத் தவிர்ப்பதற்காக, மீதமுள்ள ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் மேற்கு நோக்கி பின்வாங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90,000 பேர் சிரியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT