தேசிய ரக்பி அணியை வழிநடத்திய சிறுவன் குவான்டன் பேலஸ் : படம் உதவி ட்விட்டர் 
உலகம்

'மனிதம் மரிப்பதில்லை': கிண்டலுக்கு ஆளான ஆஸி. சிறுவன் குவான்டன் பேலஸுக்கு குவியும் ஆதரவு: ரக்பி அணியை வழிநடத்தும் கவுரவத்தால் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

குள்ளமாக இருப்பதால் தன்னை எல்லோரும் கிண்டல் செய்வதால் தன்னை கொன்றுவிடுங்கள் என்று ஆஸ்திரேலியாவின் 9வயது சிறுவன் குவான்டன் பேலஸ் கண்ணீர்விட்டு அழும் காட்சியை அவரின் தாய் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த வீடியோ பகிரப்பட்டபின் சிறுவன் குவான்டன் பேலஸுக்கு ஆதரவு குவியத் தொடங்கியது, ஏராளமானோர் அவருக்கு உதவியும் அளித்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு குயின்ஸ்லாந்தில் நடந்த ஆல்-ஸ்டார் அணிக்கும், நியூஸிலாந்து மாரியோஸ் அணிக்கும் இடையிலான ரக்பி போட்டியில் சிறுவன் குவான்டன் பேலஸை வழிநடத்தச் சொல்லி வீரர்கள் அழைத்து மரியாதை செலுத்தினர்.

இதுதொடர்பான புகைப்படம் சமூக ஊடகத்தில் வெளியானவுடன் ஏராளமானோர் சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்து, வாழ்த்தி வருகின்றனர்.

ரக்பி விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வமாக இருக்கும் சிறுவன் குவான்டன் பேலஸ், தன்னுடைய ஆதர்ஷ் ரக்பி வீரர்களுடன் களத்துக்கு வந்ததால் மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றான்.

என்ன நடந்தது?

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யாரகா பேல்ஸ் இவரின் 9 வயது மகன் குவான்டன் . சிறுவன் குவான்டன் குள்ளமாக இருப்பதால் வகுப்பில் சக மாணவர்கள் அவனை ஏளனம் செய்தும் துன்புறுத்தியும் வந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை பள்ளியில் இருந்து குவான்டனை அவரின் தாய் காரில் அழைத்து வரும்போது, காரில் அமர்ந்து கொண்டு சிறுவன் குவான்டன் கண்ணீர் விட்டு அழும் காட்சியை வீடியோவா சமூக வலைதளத்தில் தாய் வெளியிட்டிருந்தார்.

கொன்றுவிடுங்கள்

அதில், அந்த சிறுவன் குவான்டன் பேலஸ், " அம்மா எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் . நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனது இதயத்தில் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன். என்னை யாராவது கொன்றுவிட வேண்டும் என விரும்புகிறேன்” எனத் தனது தாயிடம் தேம்பித் தேம்பி அழுதான்.

இதுகுறித்து சிறுவனின் தாய் யாரகா பேல்ஸ் தனது பதிவில், குவாடனின் உயரத்தைக் கேலி செய்யும் வகையில் அவன் தலையில் ஒரு மாணவன் தட்டுவதை நானே நேரில் பார்த்தேன். நான் பள்ளியில் புகார் செய்து பிரச்சினை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக காரில் ஓடிவந்து ஏறிய அவன், பிறகு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கிவிட்டான்.

வேண்டுகோள்

ஒரு தாயாக எனது பொறுப்பிலிருந்து நான் தவறிவிட்டதாகக் கருதுகிறேன். நமது கல்வித் திட்டமும் தோல்வி அடைந்துவிட்டதாகவே கருதுகிறேன். சக மாணவர்களைக் கேலி செய்வதால் எத்தகைய விளைவு ஏற்படும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று பிற பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளுக்கு அவர் வேண்டுகோள்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குவாடனின் வீடியோவை அவனது தாயார் பகிர்ந்து கொண்ட பிறகு அச்சிறுவனுக்கு ஆதரவு பெருகியது. 2 கோடி முறைக்கு மேல் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது.

குவிந்த ஆதரவு

சிறுவனுக்கும் அவன் தாயாருக்கும் ஆஸ்திரேலிய தேசிய ரக்பி லீக் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர்
இந்நிலையில், குயின்ஸ்லாந்தில் ஆல்-ஸ்டார் அணிக்கும், நியூஸிலாந்து மாரியோஸ் அணிக்கம் இடையிலான ரக்பி போட்டி வெள்ளிக்கிழமை நடந்தது. அந்த போட்டியில் நடக்கும் தங்கள் நாட்டு அணியை வழிநடத்திச் செல்லும் மரியாதையை சிறுவன் குவான்டன் பேலஸுக்கு வழங்கப்பட்டது.

ரக்பி அணியின் கேப்டன் ஜோயல் தாம்ஸனின் கையைப் பிடித்துக் கொண்டு சிறுவன் குவான்டன் மைதானத்துக்குள் மகிழ்ச்சியுடன் வந்தான். அப்போது அணியின் கேப்டன் ஜோயல் கூறுகையில், " உனக்கு ஒன்றும் இல்லை குவான்டன். நீ நன்றாக இருக்கிறாய், உன்னைச் சுற்றி நாங்கள் இருக்கிறோம். இந்த வாரம் முழுவதும் எங்களுடன் இருக்கலாம்" எனத் தெரிவித்தார்

மனிதம் மரிப்பதில்லை

குவான்டன் தாயார் யாரகா பேலஸ் நிருபர்களிடம் கூறுகையில், " எனது மகன் அவனின் வாழ்க்கையில் மோசமான நாளையும் சந்தித்தான், இன்று அவனின் வாழ்க்கையில் மிகச்சிறந்த நாளையும் சந்தித்துவிட்டான். ஏளனத்துக்குப் பாதிக்கப்படுபவர்களுக்கு இறைவன் என்ன கொடுப்பார் என்பதை இதிலிருந்து அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்" எனத் தெரிவித்தார்

குவான்டன் கண்ணீர் விட்டு அழும் வீடியோவைப் பார்த்து ஹாலிவுட் நடிகர் ஹக் ஜேக்மான், கூடைப்பந்து வீரர் எனிஸ் கான்டர் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து குவான்டனுக்கு ஆதரவும், உதவிகளும் குவிந்து வருகின்றன. ஆதரவற்றோருக்கு உதவ மனிதம் எப்போதும் காத்திருக்கிறது, மரிப்பதில்லை.

SCROLL FOR NEXT