ட்ரம்ப்புடன் 12 பேர் கொண்ட குழுவினரும் இந்தியா வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளனர். அகமதாபாத்தில் உள்ள 1.1 லட்சம் இருக்கைகள் கொண்ட மோட்டேரா மைதானத்தில் நடைபெறும் ‘கெம் சோ ட்ரம்ப்’ என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அவரது வருகைக்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை தரவுள்ள நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக அவர் அதிருப்தி தெரிவித்து வருகிறார். மோடி மீதான நேசம் காரணமாகவே இந்தியா வருவதாகவும், வர்த்தக ஒப்பந்தத்தில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை எனவும் அவர் கூறி வருகிறார்.
ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய வருகையின்போது இருதரப்பிலும் வர்த்தகமே முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. ட்ரம்ப்புடன் 12 பேர் கொண்ட குழுவினரும் இந்தியா வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மூத்த ஆலோசகர் ஜாரேடு குஷ்னர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லிக்திசர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ பிரைன், நிதித்துறை செயலர் ஸ்டீவ் முனிச், வர்த்தகத்துறை செயலர் வில்பர் ரோஸ், பட்ஜெட் மற்றும் நிர்வாக அலுவலக இயக்குநர் மிக் முல்வானே ஆகியோரும் இந்தியா வருகை தருகின்றனர்.
மேலும், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கெனித் ஜஸ்டர், எரிசக்தித்துறை செயலர் புரூலைட், வெள்ளை மாளிகை செயலர் மிக் முல்வெனி, வெள்ளை மாளிகை ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், வெள்ளை மாளிகை சமூகவலைதள இயக்குநர் டான் ஸ்காவினியோ, மெலினா ட்ரம்பின் ஆலோசகர் லிண்ட்சே ரெனால்டு உள்ளிட்டோரும் இந்தியா வருகை தருகின்றனர்.