மாலி நாட்டில் இன மோதல் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மாலி, பிரான்ஸின் காலனி நாடாக இருந்தது. கடந்த 1960-ம் ஆண்டில் பிரான்ஸிடம் இருந்து அந்த நாடு விடுதலை பெற்றது. அப்போது முதல் அங்கு வாழும் பல்வேறு இன மக்களிடையே தொடர்ச்சியாக மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
மாலியில் பம்பாரா, மாலின்கே, சராகோலே, துரக், புலானி, டோகன் என 10 இனங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். வடக்குப் பகுதியில் வசிக்கும் துரக் இனத்தை சேர்ந்த முஸ்லிம்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர புலானி, டோகன் இன மக்களிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. புலானி இனத்தில் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள் ஆவர்.
இந்நிலையில் மத்திய மாலியில் புலானி இன மக்கள் அதிகம் வசிக்கும் ஓகாஸ்சாகு கிராமத்தின் மீது நேற்று முன்தினம் இரவு ஆயுதம் ஏந்திய 30 மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு ராணுவ வீரர்கள் விரைந்து வந்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். இதர 31 பேர் புலானி இன மக்கள் ஆவர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “இன மோதல் காரணமாக புலானி இன மக்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டோகன் இனத்தை சேர்ந்த ஆயுதமேந்திய குழு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ராணுவ தரப்பிலும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தன.