உலகம்

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட பெரிய பயங்கரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இதுகுறித்து ஆப்கன் உள்துறை அமைச்சகம் தரப்பில், “காபூலில் உள்ள மார்ஷல் பஹிம் ராணுவ அகாடமியின் நுழைவாயிலில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குண்டுவெடிப்புக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், குண்டுவெடிப்பு காரணமாக வீடுகள் அதிர்ந்ததாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்கொலைப் படை தாக்குதலில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இத்தாக்குதலை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பின்னணி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT