சிரியாவில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சிரியாவின் போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “சிரியாவின் வடக்குப் பகுதியில் அலெப்போ மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் சிலர் பலியாயினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் சிரியாவில் 25 பேர் பலியாகியுள்ளனர். இட்லிப் மற்றும் அலெப்போ மாகாணங்களில் குண்டுவெடிப்புகள் பரவலாக நடத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.
சிரிய அரசுப் படைகள் ரஷ்யப் படை உதவியுடன் சிரியாவின் இட்லிப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் முக்கியப் பகுதியான கிழக்குப் பகுதியைக் கைப்பற்றினர்.
சிரிய உள்நாட்டுப் போர்
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. சிரிய போரில் சிரிய அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.