உலகம்

எதிரிகளின் அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டுவர ஈரான் பலமாக வேண்டும்: அயதுல்லா அலி காமெனி

செய்திப்பிரிவு

எதிரிகளின் அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டுவர ஈரான் பலமாக வேண்டும் என்று ஈரான் மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி சனிக்கிழமை கூறும்போது,”எதிரிகளின் அச்சுறுத்தல்களை தடுக்கும் அளவிற்கும், போரை நிறுத்துவதற்கும் நாம் பலமாக வேண்டும்.

நாம் பலமாக இருந்தால் எதிரிகளின் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும். இதனால் போர் ஏற்படாது நாங்கள் யாரையும் அச்சுறுத்தும் தேவை இருக்காது. ” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.

அதற்குப் பதிலடியாக பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது.

SCROLL FOR NEXT