உலகம்

சிரியாவுக்குள் மீண்டும் நுழைந்த துருக்கி ராணுவம்

செய்திப்பிரிவு

துருக்கி ராணுவம் அத்துமீறி மீண்டும் சிரியாவில் நுழைந்துள்ளதாக சிரிய போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிரிய போர் கண்காணிப்புக் குழு , “துருக்கி ராணுவம் கார்போர்சன் எல்லையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சிரியாவுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. பயங்கர ஆயுதங்களுடன் துருக்கி படையினர் அலெப்போ மற்றும் இட்லிப் பகுதிகளை நோக்கிச் சென்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் துருக்கி அதிபர் எர்டோகன், சிரியாவில் இட்லிப் பகுதிகளில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் துருக்கி ராணுவம் இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றன. இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துள்ள துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

SCROLL FOR NEXT