சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த முக்கியப் பகுதியை ரஷ்யப் படைகள் ஆதரவுடன் அந்நாட்டு அதிபர் படைகள் கைப்பற்றியுள்ளன. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சிரிய அரசுப் படைகள் தரப்பில், ''அலெப்போ மற்றும் டமாஸ்கஸை இணைக்கும் கிளர்ச்சியாளர்களின் முக்கியக் கட்டுப்பாட்டுப் பகுதியான மாரெட் அல் நுமன் பகுதியை சிரிய அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன.
கடந்த சில நாட்களாக சிரியாவில் பல கிராமங்களிலிருந்து பயங்கரவாதப் படைகள் அகற்றப்பட்டுள்ளன. சிரிய மண்ணில் பயங்கரவாதம் இல்லாதவரை இந்தத் தேடுதல் வேட்டை தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர். சிறுவர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சிறுமிகள் பாலியல் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். அரசு, கிளர்ச்சிப் படைகள் என இருதரப்பினரும் மனித உரிமைகளை மீறி வருகின்றனர்.