உலகம்

பிரபல கூடைப்பந்து வீரர் கோபி ப்ரையண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி: 13 வயது மகளும் உயிரிழந்தார்

செய்திப்பிரிவு

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பிரபல கூடைப்பந்து வீரர் கோபி ப்ரையண்ட் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரர் கோபி ப்ரையண்ட். கூடைப்பந்து விளையாட்டில் 20 ஆண்டுகளாக மாபெரும் ஆளுமையாக திகழ்ந்தவர். ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்றவர்.

இன்று அதிகாலை கோபி ப்ரையண்ட் தனது 13 வயது மகள் ஜியானா உட்பட 8 பேருடன் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் தவுசண்ட் ஆக்ஸ் என்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

கடும் பனி மூட்டத்தின் நடுவே கலாபஸாஸ் என்னும் இடத்தில் உள்ள மலைப்பகுதியின் சென்றுகொண்டிருக்கும்போது ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.

இதில் கோபி ப்ரையண்ட், அவரது 13 வயது மகள் ஜியானா, கூடைப்பந்து பயிற்சியாளர் கிரிஸ்டினா மாஸர் உள்ளிட்ட 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரிஃப் ஹெலிகாப்டரில் இருந்த 9 பேரும் இறந்துவிட்டனர் என்பதை உறுதி செய்துள்ளார்.

கோபி ப்ரையண்ட்டுக்கு வானெஸா என்ற மனைவியும் ஜியானா உட்பட 4 மகள்களும் உள்ளனர்.

கோபி ப்ரையண்ட்டின் திடீர் மரணம் உலக கூடைப்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மரணத்துக்கு ஒபாமா, டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT