உலகம்

மியான்மரில் பீரங்கி தாக்குதல்: 2 ரோஹிங்கியா பெண்கள் பலி- காயமடைந்த 7 பேருக்கு சிகிச்சை

செய்திப்பிரிவு

மியான்மரில் பீரங்கி தாக்குதலில் ரோஹிங்கியா முஸ்லிம் பெண்கள் இருவர் நேற்று உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை ராணுவம், போராளிகள் ஆகிய இருதரப்பினரும் மறுத்துள்ளனர்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ராக்கைன் மாகாணத்தில் கடந்த 2017-ல் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர். இதையடுத்து ராக்கைன் மாகாணத்துக்கு கூடுதல் சுயாட்சி கோரி அராக்கன் ராணுவம் என்ற பெயரில் ரோஹிங்கியா போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராக்கைன் மாகாணத்தில் நேற்று நடந்த பீரங்கி குண்டு தாக்குதலில் ரோஹிங்கியா முஸ்லிம் பெண்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது

இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜா மின் துன் கூறும்போது, “ராக்கைன் மாகாணத்தில் பீரங்கி குண்டு வீச்சு சம்பவத்தில் பெண் ஒருவர் அதே இடத்தில் இறந்தார். மற்றொரு பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். இந்த தாக்குதலை ரோஹிங்கியா போராளிகள் நடத்தியுள்ளனர்” என்றார். ஆனால் போராளிகள் இதனை மறுத்துள்ளனர். ராணுவமே தாக்குதலை நடத்திவிட்டு தங்கள் மீது புகார் கூறுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மியான்மர் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் கடந்த 23-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் இதற்கு அடுத்த இரு நாட்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடந் துள்ளது.

SCROLL FOR NEXT