ஜப்பான் நாட்டின் மூத்த அதிகாரிகளை அமெரிக்கா உளவு பார்த்ததாக விக்கி லீக்ஸ் செய்தி வெளியானதையடுத்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா வருத்தம் தெரிவித்தார்.
புதன் கிழமையான இன்று அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயிடம் சுமார் 40 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியதாக ஜப்பானிய அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
பன்னாட்டு வர்த்தகம் மற்றும் வானிலை மாற்றம் ஆகிய விவகாரங்களில் ஜப்பான் நாட்டின் நிலைப்பாடுகளை விளக்கி அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை வெளியிட்ட அறிக்கையை விக்கி லீக்ஸ் வெளியிட்டதை அடுத்து ஜப்பானிய அதிகாரிகள், ஊடகங்களிடமிருந்து கேள்விகளை எதிர்கொண்டனர்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் இருநாடுகளுக்கு இடையேயான நன்னம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் எனவே இது பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் அபே, அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து தொலைபேசி உரையாடலில் அமெரிக்க அதிபர் ஒபாமா வருத்தம் தெரிவித்ததாக ஜப்பான் அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், இருவர் உரையாடலில் உலக பொருளாதார சூழ்நிலைமைகள், வடகொரியா விவகாரம் மற்றும் வானிலை மாற்றம் ஆகியவை பற்றியும் இருநாட்டுத் தலைவர்களும் பேசியுள்ளனர்.