பெருவில் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் 5 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து உள்ளூர் ஊடகங்கள், “பெருவின் தலைநகரான லிமாவில் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் விபத்துக்குள்ளானது. இது அருகிலிருந்த கட்டிடங்களில் மோதியது. இந்த தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம். 20 கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் எலிசபெத் கூறும்போது, “காயமடைந்தவர்களில் 50% பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்களில் பலருக்கு 80% தீக்காயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
பெருவில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தாக இது பார்க்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெருவில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பைப் வழியாக எரிவாயுகள் விநியோகிக்கப்படுவதை அரசு கட்டுப்படுத்துகிறது. எனவே, எரிவாயுவை விநியோகிக்க லாரிகளையே அங்கு பெரிதும் நம்பியுள்ளனர்.