உய்குர் முஸ்லிம்கள் குறித்து சீனாவுடன் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்து கொண்டார் .
அப்போது தனியார் செய்தி நிறுவனம் ஒன்று காஷ்மீர் விவகாரம் குறித்துக் குரல் எழுப்பும் நீங்கள் ஏன் சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு குரல் எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பினர் .
அதற்கு இம்ரான் கான் பதிலளிக்கும்போது, "இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன. இந்தியாவில் நடக்கும் அளவுடன் சீனாவில் நடப்பதை ஒப்பிடக் கூடாது. சீனா, பாகிஸ்தானின் சிறந்த நண்பன். எங்களது கடினமான தருணங்களில் சீனா எங்களுக்கு உதவி இருக்கிறது. நாங்கள் இது தொடர்பாக வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆனால், தனிப்பட முறையில் இவ்விகாரம் தொடர்பாக சீனாவுடன் பேசி இருக்கிறோம்” என்றார்.
முன்னதாக, சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை முஸ்லிம் பிரிவினர் முகாம்களில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கசிந்த சீன அரசின் ஆவணங்களை வைத்து, 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.