உலகம்

செனட் சபையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை தொடங்கியது

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை செனட் சபையில் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட உள்ள ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணையை நடத்தி முடிக்கும் வரை உக்ரைனுக்கு அமெரிக்காவின் நிதியுதவியையும் நிறுத்தி வைத்ததாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதன் மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு ட்ரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்றும் அமெரிக்க தேச இறையாண்மைக்குத் துரோகம் இழைத்து விட்டார் என்றும் ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியது.

இதை அடுத்து ட்ரம்ப்பை பதவியை விட்டு நீக்கத் திட்டமிட்டு, முதல் கட்டமாக பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கம் கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் செனட் சபையில் ட்ரம்ப்பின் மீதான விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன்னிலையில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு தங்கள் வாதத்தை மாறி மாறி முன் வைத்து வருகின்றனர்.

செனட் சபையில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே தீர்மானம் நிறைவேறுவது கடினம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT