சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 21 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியான இட்லிப் என்ற இடத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 21 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும், சன்னி பிரிவு கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் சிறுவர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும் சிறுமிகள் பாலியல் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் அரசு, கிளர்ச்சிப் படைகள் என இருதரப்பினரும் மனித உரிமைகளை மீறி வருவதாக ஐ. நா. தெரிவித்துள்ளது.