உலகம்

உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்: ஈரான்

செய்திப்பிரிவு


உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு காரணமாக இருந்த அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாயினர். பலியானவர்களில் பலர் ஈரான், கனடாவைச் சேர்ந்தவர்கள்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்தது.

இந்த விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. எனவே விமானத்தின் மீது ஈரான் தவறுதலாகத் தாக்குதல் நடத்தியுள்ளது என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் தெரிவித்தன.

தவறுதலாக உக்ரைன் விமானத்தை நடுவானில் ஏவுகணையைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்றும் மனிதத் தவறுகளால் இது நடந்துள்ளதாகவும் ஈரான் வருத்தம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஈரான் அரசின் செயலைக் கண்டித்து டெஹ்ரான், ஷிராஸ், எஸ்ஃபஹான், உருமியே போன்ற நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இந்த நிலையில் விமான சுட்டு வீழ்த்தப்பட காரணமாக இருந்த அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அரசு தொலைக்காட்சியில் கூறும்போது, “ இந்த சம்பவத்தில் எங்களுக்கு எங்கள் மக்களே முக்கியமானவர்கள். இதில் அலட்சியமாக இருந்த அனைவரும் சட்டத்தை எதிர் கொள்ள உள்ளனர். அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT