உலகம்

உலகம் உங்களை பார்த்து கொண்டிருக்கிறது: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

உக்ரைன் விமானம் தங்கள் நாட்டு ஏவுகணையால் சுடப்பட்டதைத் ஒப்புக் கொண்ட ஈரான் அரசுக்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இப்போராட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாயினர். பலியானவர்களில் பலர் ஈரான், கனடாவைச் சேர்ந்தவரகள்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. எனவே விமானத்தின் மீது ஈரான் தவறுதலாக தாக்குதல் நடத்தியுள்ளது என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் தெரிவித்தன.

தவறுதலாக உக்ரைன் விமானத்தை நடுவானில் ஏவுகணையைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்றும் மனிதத் தவறுகளால் இது நடந்துள்ளதாகவும் ஈரான் வருத்தம் தெரிவித்தது.

இந்நிலையில் ஈரானில் அரசின் செயலை கண்டித்து போராட்டங்கள் டெஹ்ரான், ஷிராஸ், எஸ்ஃபஹான், உருமியே போன்ற நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் பதற்றம் நிலவுகிறது.

ட்ரம்ப் ஆதரவு

ஈரான் புரட்சி படை தளபதி சுலைமான் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பதற்றம் நிலவும் நிலையில் ஈரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரானில் நடைபெறும் மக்களின் தொடர் போராட்டங்களின் கள நிலவரங்கள் குறித்து மனித உரிமை அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும். ஈரானில் இணையம் துண்டிக்கப்படுவதையும் , அமைதியான போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதையும் நாங்கள் மீண்டும் பார்த்து கொண்டிருக்க மாட்டோம். உலகம் உங்களை பார்த்து கொண்டிருக்கிறது.

ஈரானில் துன்பப்படும் தைரியமான மக்களே. நான் பதவி ஏற்றது முதல் உங்களுக்கு துணையாக நிற்கிறேன். எனது அரசும் உங்களுக்கு துணை நிற்கும். நாங்கள் உங்கள் போராட்டத்தை மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறேன். உங்களது தைரியத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT