அதிபர் ஹசன் ரவ்ஹானி 
உலகம்

‘‘துக்கமான நாள்; மனித தவறால் நடந்தது’’ - உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை ஒப்புக் கொண்டது ஈரான்

செய்திப்பிரிவு

உக்ரைன் விமானத்தை நடுவானில் ஏவுகணையை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தவில்லை என்றும் மனித தவறுகளால் இது நடந்துள்ளதாக ஈரான் வருத்தம் தெரிவித்துள்ளது.

ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர். பலியானவர்களில் 147 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இந்த விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஈரான் தவறுதலாக ஏவுகணையை வீசி உக்ரைன் விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியது.

உக்ரைன் விமானத்தை தவறுதலாக எண்ணி, இந்த தாக்குதலை ஈரான் நடத்தி இருக்கலாம் எனவும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். க்ரைன் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் உக்ரைன் விமானம் நொறுங்கியது தொடர்பாக சில முக்கிய ஆதாரங்களை உக்ரைன் அதிபரை சந்தித்து நேரில் அளித்தனர்.


ஆனால் உக்ரைன் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தவில்லை என ஈரான் திட்டவட்டமாக கூறி வந்தது.
இந்தநிலையில் உக்ரைன் விமானத்தை நடுவானில் சுட்டு ஏவுகணையை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தவில்லை என்றும் மனித தவறுகளால் இது நடந்துள்ளதாக ஈரான் வருத்தம் தெரிவித்துள்ளது.

மனித தவறு காரணமாக உக்ரைன் பயணிகள் விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

SCROLL FOR NEXT