பாகிஸ்தானில் மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண், உயிருடன் எழுந்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது தற்போது தெரிய வந்துள்ளது.
இறுதிச் சடங்கு செய்து கொண்டிருந்த நிலையில், அவரின் மூட்டுகள் அசைவதைக் கண்டு அப்பெண் உயிருடன் இருப்பதை அவரது குடும்பத்தினர் உணர்ந்தனர்.
இதுகுறித்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ரஷிதா பாபி. 50 வயதான இவர் கராச்சியில் உள்ள அப்பாஸி ஷாகித் மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ரஷிதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அவருக்கு இறப்புச் சான்றிதழ் அளித்து அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் ரஷிதாவின் இறுதிச் சடங்கை நடத்த அவரின் குடும்பத்தினர் தயாராகினர். இறுதிச் சடங்கு செய்ய முற்பட்டபோது ரஷிதாவின் மூட்டுகள் அசைவதைக் கண்டு அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ரஷிதாவின் மருமகள் கூறும்போது, “நாங்கள் அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்து கொண்டிருந்தோம். அப்போது அந்த அறையில் இருந்த பெண் ஒருவர் அவரது மூட்டுகள் அசைவதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து அவரது நாடித் துடிப்பை நாங்கள் சரிபார்த்தோம். அதன் பின்னர் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று தெரிந்தது” என்று தெரிவித்தார்
இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரஷிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனையிலேயே மீண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக, மருத்துவமனையில் என்ன தவறு நடந்தது என்பது தெரியவில்லை.