தண்ணீரை அதிகம் குடிப்பதால் சுமார் 1000 ஒட்டகங்களைக் கொல்ல ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ஆஸ்திரேலியாவில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், தென் பகுதியில் உள்ள ஒட்டகங்கள் அதிக அளவு தண்ணீரைக் குடிப்பதால் அவற்றைக் கொல்ல அரசு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
5 நாட்களுக்குள் 1000 ஒட்டகங்களைக் கொல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) முதல் ஒட்டகங்களைக் கொல்லும் பணி தொடங்கும் என்றும், ஒட்டகங்களைக் கொல்வதற்காக ஹெலிகாப்டர்களை ஆஸ்திரேலிய அரசு அனுப்பியுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஒட்டகங்களைக் கொல்வதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக அங்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. சுமார் 480 மில்லியன் விலங்குகள் ஆஸ்திரேலிய காட்டுத் தீக்குப் பலியானதாக தனியார் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.