உலகம்

குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு: லண்டனில் இந்தியர்கள் பேரணி

செய்திப்பிரிவு

பிரிட்டன் தலைநகர் லண்டனில் இன்று குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக இந்தியர்கள் பேரணி நடத்தினர்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாகவும் பல இடங்களில் பேரணி நடந்து வருகின்றன. வெளிநாடுகளிலும் இதுபோன்ற பேரணிகள் நடந்து வருகின்றன. பிரிட்டன் தலைநகர் லண்டனில் இன்று குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக இந்தியர்கள் பேரணி நடத்தினர்.

லண்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு எதிரே நடந்த இந்த பேரணியில் ஏராளமான இந்தியர்கள் கூடி குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT